சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 17
நாம் எதையும் பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக வெளியே செல்லவில்லை, நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளைக் கவனிக்கவில்லை. இந்தியா மனத்தின் வீழ்ச்சிக்கு இது ஒரு முக்கியக் காரணம். அதற்கான தண்டனையை நாம் பெற்றுவிட்டோம், இனியும் அவ்வாறு இருக்க வேண்டாம்.
நீங்கள் பிற நாடுகளில் எந்த அளவிற்க்கு பயணம் செய்கிறீர்களோ, அந்த அளவிற்க்கு உங்களுக்கு நல்லது, உங்கள் நாட்டிற்கும் நல்லது. இதை நீங்கள் கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால், இன்று நீங்கள் உங்களை ஆள விரும்பும் ஒவ்வொரு நாடுகளுக்கும் அடிமையாக அவைகளின் கால்களில் வீழ்ந்து கிடக்கமாட்டீர்கள்.
நீங்கள் வாழ வேண்டுமானால் கட்டாயம் விரிவடைய வேண்டும். நீங்கள் விரிவடையாமல் நிற்கின்ற அந்தக் கணமே மரணம் உங்கள் தலைக்கு வந்துவிட்டது; ஆபத்து அருகில் வந்துவிட்டது.
நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம் என்பது நிதரிசனமான உண்மை. அது எப்படி? அறிவிலிகள் எதையாவது நினைத்து விட்டுப் போகட்டும், நாம் வாழ்ந்து வருவதற்கான காரணம் நாம் வெளியுலகிற்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். மதம், தத்துவம் , ஞானம், ஆன்மீகம் இவையே உலகிற்கு இந்தியா வழங்கும் கொடை.
நமது மதம் பிற மதங்களைவிட உண்மையாக இருப்பதற்கான காரணம், அது எப்போதும் யாரையும் ரத்தத்தால், வன்முறையால் வெற்றி கொள்ளவில்லை. அது ஒருபோதும் ரத்தம் சிந்தவில்லை; அதன் உதடுகளிலிருந்து வாழ்த்துச் சொற்களே, அமைதியும் அன்பும் கனிவும் நிறைந்த வார்தைகளே எப்போதும் வந்தன.
இங்கு மட்டும் தான் சகிப்புத் தன்மைபற்றிய லட்சியங்கள் முதலில் பிரச்சாரம் செய்யப்பட்டன. இங்கு மட்டும்தான் சகிப்புத் தன்மை, அனுதாபம் முதலியவை செயல்படுத்தப்பட்டன. மற்ற எல்லா நாடுகளிலும் இவை வெறும் கொள்கை அளவில்தான் இருக்கின்றன.
இன்று தன் நாகரீகத்தை பற்றி இவ்வளவு பெருமையடித்துக் கொள்கின்ற கிறிஸ்தவ மதம், இந்தியச்சிந்தனைகளுடைய சின்னஞ்சிறு துணுக்குகளின் சேர்க்கையே தவிர வேறல்ல. நமது மதம் எவ்வளவு மகிமை வாய்ந்தது தெரியுமா! எவ்வளவோ பெருமை வாய்ந்த புத்த மதம் இருக்கிறதே, அது நம் மதத்தின் வெறும் ஒரு துடுக்குக் குழந்தை மட்டுமே! கிறிஸ்தவமதமோ நமது சில சிந்தனைத் துனுக்குகளை இணைத்து ஒட்டுபோடப்பட்ட ஒரு போலி மட்டுமே
நமது இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாட்டின் அடித்தளமாகவும் முதுகெலும்பாகவும் உயிர்நிலை மையமாகவும் இருப்பது மதம், மதம் மட்டுமே. மற்றவர்கள் அரசியலைப்பற்றிப் பேசட்டும், வியாபாரத்தின் மூலம் குவிக்கின்ற அளவற்ற செல்வத்தின் பெருமையைப் பேசட்டும், பரவி வருகின்ற வாணிப வளாகத்தைப்பற்றி பேசட்டும், சுதந்திரத்தின் மகிமையைப்பற்றி பேசட்டும். இவைகளை எல்லாம் இந்துவின் மனம் புரிந்து கொள்ளாது. புரிந்து கொள்ளவும் விரும்பாது. ஆன்மீகம், மதம், இறைவன், ஆன்மா, எல்லையற்ற பரம் பொருள், முக்தி- இவை பற்றியெல்லாம் பேசிப்பாருங்கள்.பிற நாடுகளின் உள்ள தத்துவ ஆசிரியர்கள் என்று கூறப்படுகின்றவர்களைவிட நம்நாட்டில் உள்ள சாதாரண குடியானவன் இவற்றைபற்றி அதிகமாக அறிந்திருப்பான். இது உறுதி. அன்பர்களே , நாம் இந்த உலகத்திற்குப் போதிக்க வேண்டியவை சில உள்ளன என்று கூறினேன். ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு காலம் கொடுமையிலும் அன்னிய ஆதிக்கத்திலும் அவர்களின் தண்டனைகளின் கீழும் வாழ்ந்தும் இந்த நாடு அழியாமல் இருப்பதற்குரிய ஒரே காரணம், இந்த உலகத்திற்குப் போதிக்க வேண்டியதை அது பெற்றிருப்பது தான். இந்த நாடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் அது கடவுளையும் மதம் மற்றும் ஆன்மீகக் கருவூலங்களையும் கைவிடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது.
தற்போது அரசியல் பேராசைகளாலும் சமூகத்திட்டங்களாலும் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்ட, பாதி செத்துவிட்ட மேலை நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் புதிய வாழ்வையும் புதிய சக்தியையும் வெள்ளம் போல் பாய்ச்சுவதற்கான மதம் மற்றும் ஆன்மீகத்தின் ஊற்றுக்கள் இன்னும் இந்த நாட்டில்தான் இருக்கின்றன.